Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேலம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 28,29 ஆகிய 2 நாட்கள் பொதுவேலை நிறுத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜ.க. அரசு பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன். பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு உக்ரைன் போரை முன் நிறுத்துவது நகைப்பிற்கு உரியது. பா.ஜ.க. அரசின் நிர்வாக திறமை இல்லாததை இது காட்டுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் நம்பிக்கையை தருகிறது. இதன் மூலம் தமிழக பொருளாதாரம் மேம்பட்டு முதலிடம் வகிக்கும்.
தன்னை பற்றி பேச வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தி.மு.க.வை பற்றியும், தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்தும் பேசி வருகிறார். அவருக்கு கவன ஈர்ப்பு போபியா வந்து உள்ளது. அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டணி கட்சியினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடத்தை உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலமாக உரிய பதவிகள் வழங்கி இருப்பதற்கு தமிழக முதல்வருக்கும் குழுவிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீட் ரத்து குறித்து தீர்மானத்தை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கூறி உள்ளார். இதுநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.